தூய ஆவியார் |
Jan-23-2023 - தூய ஆவியார் புதிய ஏற்பாடு இயேசுவை அடித்தளமாகவும், தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்கு உட்பட்டதுமாகும். இயேசு கிறிஸ்து அல்லது தூய ஆவியார் இல்லையேல் கிறிஸ்தவம் இல்லை ஆகும். இயேசு இருக்கும் இடத்தில் தூய ஆவியார் இருப்பார். தூய ஆவியார் இருக்கம் இடத்தில் இயேசு இருப்பார். கிறிஸ்தவ இறைவழிபாடு தூய ஆவியாரின் வழிநடத்துதலை முற்றிலும் சார்ந்து நிற்பதாகும். கிறிஸ்தவ இறைவழிபாட்டின் செபங்கள், பாடல்கள், போதனைகள் அனைத்தும் தூய ஆவியாரின் வழிநடத்துதலாக அமையும்போது மட்டுமே இயேசுவின் உண்மை உடனிருப்பை அனுபவிக்க முடியும். பாடல்களில் கடவுளின் பிரசன்னம்: சிறப்பாக பாடுதல் - உள்ளுணர்வோடு பாடுதல். உள்ளுணர்வோடு பாட வேண்டுமென்றால், பாடலின் வரிகள் உங்கள் அனுபவமாக மாற வேண்டும். (சிறந்த பாடல்களை தெரிந்தெடுத்தல்: உள்ளுணர்வோடு பாடும்பாடலை பாடுதல்) பாடலை செபமாக மாற்றுதல். (செபம் உங்களை பாதுகாக்கம், பயன்படுத்தும், ஆசீர்வதிக்கும்) இறை வாழ்வு மற்றும் பணி வாழ்வுக்கு அனுபவம் மற்றும் அறிவு மட்டும் போதுமா? இயேசு அனுபவத்தோடும், அறிவோடு மட்டும் சீடர்களை பணிக்கு அனுப்பவில்லை. தூய ஆவியின் நிறப்புதலோடு அனுப்புகிறார். லூக்கா 24:47‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. 48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். 49இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார். தி.ப: 1:4 அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். 5யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்” என்று கூறினார். தி.ப: 1:8 ஆனால், தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார். தி.ப: 2:1 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும், நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். தூய ஆவியார் யார்? அடையாளம் அல்ல. (காற்று, முழக்கம், நெருப்பு, நாவு, புறா) சக்தி அல்லது ஆவி அல்ல. தூய ஆவியார் ஆள் தன்மை உடையவர். தூய ஆவியார் இயேசுவின் தற்சுருவம். இயேசுவை கண்கள் பார்த்தன. அத்துடன் இயேசுவை ஒரு இடத்தில் மட்டும் பார்த்தனர். தூய ஆவியார் வழியாக இயேசுவை உணர்வின் மூலம் உணர்கிறோம் மற்றும் ஒரே நேரத்தில் அகிலம் முழுவதும் உணர்கிறோம். இயேசு வழியாக இறை தந்தை மனுக்குலத்திற்கு மீட்பை நிறைவேற்றினார். தூய ஆவியார் வழியாக இறை தந்தை மனுக்குலத்தை மீட்புக்குள் வழிநடத்துகிறார். கிறிஸ்துவுக்குள் வாழ்வதற்கு ஊனியல்பின் சக்தி தடையானது. எனவே தூய ஆவியின் துணை அவசியமாகும். யோவான் 6:63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. உரோமையர் 7:18 ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. உரோமையர் 8:5 ஏனெனில், ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். உரோமையர் 8:6 ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். உரோமையர் 8:9 ஆனால், கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. உரோமையர் 8:13 நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். 1 கொரிந்தியர் 3:3 நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? கலாத்தியர் 5:16 எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். கலாத்தியர் 5:17 ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. கலாத்தியர் 5:19 ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, 20சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, 21அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். |